உங்கள் மன விருப்பங்கள், நோக்கங்கள், தனி விருப்பங்களா? அல்லது பொது நோக்கங்களா?, எப்படி மதிப்பீடு செய்வீர்கள்.

By நா. மகேசன். கனடா on June 16, 2025

Card image cap

உங்கள் மன விருப்பங்கள், நோக்கங்கள், தனி விருப்பங்களா? அல்லது பொது நோக்கங்களா?, எப்படி மதிப்பீடு செய்வீர்கள்.
பலதரப்பட்ட சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் உங்களின் நடைமுறை வாழ்க்கையில் சங்கமித்து இருக்கலாம். அவை உங்களை நல்ல விதத்திலோ, தீயவிதத்திலோ தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அவற்றின் ஒட்டுமொத்த விளைவுகள் உங்களை பலமானவர்களாகவும், பலவீனமானவர்களாகவும் மாற்றி இருக்கலாம். நீங்கள் செய்யும் செயலிலேயே அது தங்கி இருக்கின்றது. அது உங்களைப் பாராட்டுவதாகவும் அமையலாம். பகடைக் காயாகவும் அமையலாம். வெற்றி நோக்கி எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு குற்றம் காணுதல், ஒத்துழைப்பு இல்லாமை அல்லது குறுக்கிடும் தடைகள், முழு முயற்சியின் வீரியத்தை தடுக்கின்றன. இதனால் செயல் திட்டங்கள் தடைப்படுகின்றன. இதனால் இவர்கள் மனோ வியாதிக்கு ஆளாகின்றார்கள். சிலர் கடும் உழைப்பினால் தமது வெற்றி என்ற விருப்பங்களையும், நோக்கங்களையும் அடைந்து இருக்கின்றார்கள்.
உங்களது நிகழ்கால நடத்தையும், கடந்தகால வாழ்க்கையையும் சார்ந்துதான் உங்களது விருப்பங்கள், நோக்கங்கள் சில உங்களுக்கு நன்றாகவே தெரிந்து இருக்கும். ஆனால் சிலவற்றிற்கு தெளிவான காரணம் புலப்படாது இன்னும் சில விடயங்களில் நீங்கள் உறுதியாக இல்லை. உங்களது உண்மை நிலையை நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். இப்படிப்பட்ட நிலமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பீர்கள். அப்படி நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் அதற்கு ஒரு மாற்றுக் கருத்தக் கூறுவீர்கள். சந்தர்ப்பத்திற்கு ஏற்றால் போல் கருத்துக்களும் சொற்களும் மாறுபடும். சிலர் தமக்கு சேவை செய்வதில் விருப்பங்களும் சமுதாய நோக்கங்களும் தான் என்று முத்திரை குத்துவார்கள்.
தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும்போது பலதடைகளும் குறுக்கீடுகளும் வருவது சகஜம், அவைகளை நீங்கள் எப்படி சமாளிக்கின்றீர்கள் என்பது உங்கள் கைகளில்தான் இருக்கின்றது. அதை நேர்வழியில் பூர்த்தி செய்யாவிட்டால் அதை மாற்று வழியில் பூர்த்தி செய்கிறார்கள். இவர்கள் சமுதாயத்தில் இருந்து தங்களை விலத்திக் கொள்வார்கள். ஆனால் ஒருவரும் எதிர்பாராத பெரிய விடயங்களை சமுதாயத்திற்கு செய்து விடுவார்கள்.
அன்பாக பழகிய நண்பர்களும், உறவினர்களும் நாங்கள் பழகும்போது எங்களுக்கு குற்றம் செய்து இருந்தால் நாங்கள் அவர்களை குற்றவாளிகள் என்று முத்திரை குத்தி அவர்களை விட்டு விலகி விடுகின்றோம். இந்த உடன்பாடு எல்லோருக்கும் பொருந்தும்.அந்தரங்க ஆசைகளும், அந்தரங்க நோக்கங்களும் தான் பெரும்பாலனவர்களை ஆதிக்கம் கொள்கின்றன இவர்கள் எனக்கு ஒன்றும் வேண்டாம், எனக்கு ஒன்றும் தேவையில்லை என்று கூறுவதற்கு நீண்டகாலம் பிடிக்கின்றது. பொதுவாக எல்லோரும் பேச்சின்மூலம் அவர்களின் மனவழற்சி புலப்படும். பிறரால் அன்பாகவும், பாசமாகவும் பேசப்படாத ஒருவர் மற்றவர்களையும் இப்படி அன்பாகவும், பாசமாகவும் பழகமாட்டார்கள். இதில் இருந்து நீங்கள் புரிந்து கொள்வது என்னவென்றால் நீங்கள் மற்றவர்களுடன் அன்பாக நடந்து கொண்டால் அவர்களும் உங்களுடன் அன்பாக நடப்பார்கள். இல்லாவிட்டால் கடைசிவரை பொறுத்து இருந்து உங்களை விட்டு விலகி விடுவார்கள்.
நான் கூறும் இந்த காரணங்கள் உங்களிடம் இருக்கின்றதா?
நீங்கள் அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவரா?
யாரும் உங்களை மதிக்கவில்லை என்று கவலைப்படுபவரா?
யாரும் உங்கள் சொற்களை பொருட்படுத்தவில்லை என்றால் மனம் உடைந்து போவீர்களா?
உங்களுக்கு நண்பர்களோ, உறவினர்களோ விருந்து ஒன்றிற்கு அழைப்பு விடாவிட்டால் மனம் தளர்ந்து போவீர்களா?.
நீங்கள் பேசும் வார்த்தைகளில் ஏதேனும் தவறாக பேசிவிட்டேனா என்று கவலைப்படுபவரா?
இந்த ஜந்து கருத்துக்களிலும் நீங்கள் ஒன்றிற்கு மேல் கடைப்பிடித்தால் நீங்கள் தேவைக்கு அதிகமாக உணர்ச்சி வசப்படுகின்றீர்கள் என்று அர்த்தம். கறையான் புற்று மலையாக மாறிய கதைதான். உங்களைப்பற்றி நீங்களே உயர்வான எதிர்பார்ப்பு உடையவராக இருக்கலாம். சில சமயங்களில் நீங்கள் எதிர்பார்ப்புக்களை குறைத்துக் கொண்டால் சமுதாயத்தில் பெரும் செல்வாக்கு மிக்கவராக வாழலாம்.

நா. மகேசன்
கனடா.