நஞ்சு .
எல்லாவற்றிக்குமே ஒரு வரையறை உண்டு, எல்லை உண்டு .தெவிட்டாத இன்பமானாலும் அளவுக்கு அதிகமானால் தெவிட்டி விடுகின்றது. வெறுப்பு வந்து விடுகின்றது.
எம் வாழ்வினை நூறு வயதுவரை தான் என கோடு போட்டதும் இன்பமாய் வாழ்வதற்குத் தான். இருநூறு முன்னூறு ஆண்டுகள் வாழ முடிந்தால் எமக்கே எம் வாழ்வின் மீது வெறுப்பு ஏற்பட்டு விடும்.ஏன் தான் பிறந்தோம் என எம் வாழ்வின்மீதே எமக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடும்.
பசிக்கு மட்டுமா நாம் உணவை உண்கிறோம். பசியை விட ருசிக்காகவே அதன் சுவைக்காகவே அனேக உணவை விரும்பி உண்கிறோம்.
எது வரை சாப்பிட்டால் உணவு ருசியாக இருக்கும் ?. இன்னும் ஒருபிடி சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என நாம் எண்ணும் போது நிறுத்தி விடவேண்டும். அப்போதுதான் அது சுவையானாது. ஒரு பேச்சாளன் மிகவும் இனிமையான பேச்சாளன் கேட்கும் அனைவருமே அவர் நாவன்மையால் கட்டுண்டு கிடக்கிறார்கள். இன்னும் கொஞ்ச்ம் பேசினால் நன்றாக இருக்குமே என சபையோர் எண்ணும் போது அவர் நிறுத்திவிட வேண்டும்.
அப்போதுதான் அவர் பேச்சில் சுவை தெரியும்.
நாம் எதுவரை வாழ வேண்டும் ?.
எம் மனைவி மக்கள் உறவினர் ஊரவர் அனைவருமே எம்மை நன்றாக நேசிக்கிறார்கள் விரும்புகிறார்கள் ,இவரை அடைவதற்கு நாம் கொடுத்து வைத்துள்ளோம் என அவர்கள் எல்லாம் எண்ணும் போது நாம் போய் விடவேண்டும். எண்பது நூறு வரை வாழ்ந்து படுக்கையில் படுத்து நோய் நொடியுடன் சீரழியும் போது எவருக்குமே நம்மீது வெறுப்புத்தான் ஏற்படும். எப்போது இவர் போய்ச்சேருவார் என்று அன்பு செலுத்தியவர்களே எண்ணத் தொடங்கி விடுவார்கள்.
அவர்கள் நேசிக்கும் போதே போய்ச் சேர்ந்து விட்டால் என்றென்றும் அவர்கள் மனதில் நிறைந்து நிற்போம்.
காந்தி, கண்ணதாசன், காமராசர் புகழுடன் இருக்கும் போதே போய்ச் சேர்ந்து விட்டார்கள். அதனால்தான் இன்றுவரை இறந்தும் இறவாது எம்முடன் இருக்கிறார்கள். காந்தி இன்று உயிருடன் இருந்தால் மதிப்பிழந்து மறக்கப்பட்டவராகவே போய்ச் சேர்ந்திருப்பார்.
ராஜீவ் ஜே ஆர் உடன் படிக்கை இந்திய அமைதிப்படை இப்போதைய இறுதியுத்தம் என இந்தியா எமக்குத்தந்த தொல்லைகளும் அழிவுகளும் கொஞ்சமல்ல !.
இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என அவர் எமது ஆபத்பாண்டவராக கருதிப் போற்றுகின்றோமே எதனால் !
இலங்கை அரசிற்கு எதிராகவும் எமக்கு சார்பாகவும் அப்போது அவர் நடந்து கொண்டதால் தான். அன்றைய நிலையில் இந்திரா மட்டுமல்ல வேறு எவருமே அப்படித்தான் நடந்திருப்பார்கள். ஒரு வேளை இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால் தமிழ்மக்களின் நலனைவிட இலங்கை அரசின் நட்பு அவருக்குத் தேவைப்பட்டிருக்கலாம். அதனால் இன்று இந்தியா செய்ததையே அவரும் செய்திருக்கக்கூடும் . நல்லவேளை நாம் அவரை மதிக்கும்போதே அவர் போய்ச் சேர்ந்துவிட்டார்
எம் .ஜி,ஆர் , அண்ணாத்துரை கூட இன்று உயிருடன் இருந்திருந்தால் கருணாநிதியின் வரிசையில் சேர்ந்திருப்பார். ஏன் கருணாநிதிகூட எமக்காக முழக்கமிட்ட அன்றைய காலத்தில் மறைந்திருந்தால் எமது மனதில் உயரத்தில்தான் இடம் பிடித்திருப்பார்.
எதற்கும் ஒரு எல்லை வேண்டுமென்று சொன்னேனே இது எங்கள் போராட்டத்திற்கும் நன்றாகவே பொருந்தும். வாழ்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எல்லைகடந்து போராட்டமே வாழ்வு என ஆகியபோது எமது இறங்கு முகம் ஆரம்பித்துவிட்டது.
2002 களில் இவ்வியக்கத்தை எவருமே வெல்லமுடியாது இவனைப்போல் ஒரு தலைவன் இனிப் பிறந்துதான் வரவேண்டுமென உலகமே வியந்து நின்றவேளைதான் எமது உச்சக்கட்டம், அப்போது கொடுக்கவேண்டியதைக் கொடுத்து பெறக்கூடியதைப் பெற்றிருந்தால் ஆகக் குறைந்தது இப்போது ஏற்பட்ட இழப்பையாவது தவிர்த்திருக்கலாமே !, விதி யாரை விட்டது.
எல்லையை மீறினால் எல்லாமே அழிவுதான்.
ஆம், போகவேண்டிய நேரத்தில் போய்விட வேண்டும். அப்போதுதான் எமக்கு மதிப்பும்இருக்கும், மரியாதையும் இருக்கும்.
பொன் கந்தவேல்
ஸ்காபுரோ- கனடா.
By பொன் கந்தவேல்
Photo by Idaikkadu.com:
Quotes
Mistakes are a part of being human. Appreciate your mistakes for what they are: precious life lessons that can only be learned the hard way. Unless it's a fatal mistake, which, at least, others can learn from.
எண்ணும் எழுத்தும்…………….
எமது வாழ்விலேற்படும் பருவங்களில் பள்ளிப்பருவம் முக்கியமானது. எம் வாழ்வைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. எம் வாழ்வில் ஒரு முறையே வரும் பள்ளிப்பருவம் வாழ்நாள்வரை மறக்கமுடியாது. பள்ளிப்பருவத்து இனிய நினைவுகளை நினைக்கும் போதெல்லாம் எமது பாடசாலையும், எமக்குக் கல்வியூட்டிய ஆசிரியர்களும் எம் வகுப்பு நண்பர்களும் நண்பியரும் மறக்க முடியாத சில நிகழ்வுகளும் எம் கண்முன்னே வந்து நிற்கும்.
பள்ளிக்கால நினைவுகள் கூட இனிமையானவைதான். எம் வாழ்வை வளம்படுத்த நல்ல பெற்றோரை அடைவதற்கு எப்படி நாம் கொடுத்துவைக்க வேண்டுமோ அவ்வாறு எம்வாழ்வினை உயர்த்துவதற்கு உந்துசக்தியாக அமையும் நல்ல ஆசிரியர்களை அடைவதற்கும் நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அந்த வகையில் சிறந்த பாடசாலையையும் சிறப்பான ஆசிரியர்களும் எமக்கு கிடைத்ததையிட்டு நான் பெருமை யடைகின்றேன்.
1955 முதல்- 1967 வரை எம்மூர் பாடசாலை எம்மை நல்லதோர் மாணாக்கனாக தேர்ச்சி பெறவைத்தது. பாலர்பிரிவு முதல் கனிஸ்ட பிரிவுவரை நாம் பெற்றகல்வி எமது வாழ்வின் சொத்தாகும்.அப்போதைய எமது ஆசிரியர்கள் எமது பாடசாலை எமது பிள்ளைகள் என்ற நோக்கில் ஊதியத்தைவிட கடமையையே பெரிதாக எண்ணினர். அவர்களின் கடமைக்கு ஊதியம் வழங்கப்பட்டதேயன்றி ஊதியத்திற்காக அவர்கள் கல்வியை விலைபேசவில்லை.
ஜந்தாம் வகுப்புவரையான கீழ்ப்பிரிவின் தலமை ஆசிரியராக திரு சின்னையா ஆசிரியர் இருந்தார். எமது ஆசிரியர்களாக கந்தசாமி ஆசிரியர், வேலுப்பிள்ளை ஆசிரியர், சித்திவினாயகமூர்த்தி ஆசிரியர், மங்கையர்க்கரசி ஆசிரியை முதலானோர் எம்மைக்காத்து வந்தனர்.
கனிஸ்ட மேல்பிரிவுகளில் சிங்காரி ஆசிரியர், பொன்னுத்துரை ஆசிரியர், RVK கந்தையா ஆசிரியர், பண்டத்தரிப்பு கந்தையா ஆசிரியர், சிவராசசிங்கம் ஆசிரியர், தனேஸ்வரன் ஆசிரியர், PT ஆசிரியை, லோகேஸ்வரி ஆசிரியர், புவனேஸ்வரி ஆசிரியர், திரு & திருமதி சிவனேசபிள்ளை ஆசிரியர்கள், இளையதம்பி ஆசிரியர், முத்து ஆசிரியர், திருமதி இராசரத்தினம் ஆசிரியை இவர்களுடன் அதிபராக திரு கணபதிப்பிள்ளை ஆசிரியர் முதலானோர் குருநாதர்களாக எமக்கு கல்விப்பால் ஊட்டி வளர்த்தனர்.
எமது வகுப்பு தோழர்களாக என்நினைவில் நிற்கின்ற முருகையா, தருமராசா, முத்துலிங்கம், இடைக்காடர் ஈஸ்வரன், வைகுந்தவாசன் (பேபி) கனகசுந்தரம் ,திருஞானசம்பந்தர் (தற்போதய மேலதிக அரசாங்க அதிபர், வவுனியா),குமாரசாமி ,சிவகுமாரன், கந்தவேள் (சாமி) ,வினாயகமூர்த்தி ,சற்குணலிங்கம், செல்வராசா, வரதராசா, கந்தசாமி, சுந்தரலிங்கம் போன்றவர்களுடன் பள்ளித்தோழிகளாக சரஸ்வதி சிவலோக வள்ளி யம்மாள், கெங்காதேவி (வரணன்), சிவேஸ்வரி, மனோண்மணி, முதலானோர் கல்விகற்றனர்.
அப்போதைய பாடசாலை இப்போது இருப்பதைப்போல் மாடிமனையுடன் கூடிய பெரிய கட்டிடமல்ல .இப்போது உள்ள விளையாட்டு மைதானம் பூநாரிப்பற்றைகளும், மொண்டிக்கற்களும் நிறைந்த பற்றைக்காடாக காட்சிதந்தது. அப்போது இல்ல விளையாட்டுப் போட்டிகளை பாடசாலையில் உள்ள சிறிய இடத்தில்தான் பயிற்சி செய்வோம். இல்ல விளயாட்டிப்போட்டி சாங்காணித் தரவையில்தான் நடைபெறும். அப்போது தற்போதைய போல் இராணுவக் கெடுபிடி ஏதும் கிடையாது,எம்மூரில் கடற்கரை முதலான எந்தப்பகுதிக்கும் சுதந்திரமாக எம்மால் நடமாட முடியும். சேர இல்லம், சோழஇல்லம், பாண்டியஇல்லம் என மூன்று இல்லங்களுக்கிடையே போட்டிநடைபெறும், பாடசாலையில் இருந்து பி.ப. 2-00 மணிக்குப் பொடிநடையாக சாங்காணி மைதானத்திற்கு போவோம். மாலை 6-00 மணியுடன் அனைத்துப் போட்டிகழும் முடிவடைந்து பரிசளிப்பும் அங்கேயே நடைபெறும்.
பாடசாலையில் சமய விழாக்களும் சிறப்பாக நடைபெற்றன. அப்போது சமய பாடத்தைப் போதித்துவந்த RVK கந்தையா ஆசிரியர் சமயகுரவர்கள் குருபூசைதினம் சரஸ்வதிபூசை முதலானவற்றை முன்னின்று நடாத்தினார். சரஸ்வதிபூசை சிறப்பாக நடைபெறும் பாடசாலை பெரியமண்டபத்தில் மேற்குபுறத்தில் உள்ள அதற்கென அமைக்கப்பட்ட இடத்தில் நவதானியங்களுடன் கும்பம் வைத்து தினமும் காலை ஒரு மணிநேரம் அமைதியாக பஞ்சபுராண சிவபுராண பாராயணம் நடைபெறும். . சின்னக்காளின் பொன்னம்பலம் நல்லகுரல் வளம் மிக்கவர் கேட்போர் மனமுருக இராக ஆலாபனையுடன் பண்ணிசை பாடுவார். சரஸ்வதிபூசை அர்ச்சகராக தியாகராச
குருக்கள் ஒவ்வொரு நாளும் நேரகாலத்துடன் வந்துவிடுவார், பிடியதனுருகுமை என்னும் அவரது தேவாரத்துடன் மாணவர்களின் பஜனைப்பாடல்களுடன் பிரசாதமாக கடலை அவல் வழங்கலுடன் அன்றைய வழிபாடு நிறைவு பெறும்.
விளையாட்டு நிகழ்வுகளுக்கு பொறுப்பாக உடற்பயிற்சி ஆசிரியை ஒருவர் நெடுங்காலம் கடமையாற்றினார். கொஞ்சம் சிவப்பாக கட்டையான,பல்லு மிதப்பான
அழகான அந்த ஆசிரியரை PT வாத்தியார் என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். அதனால் அவரது பெயர் என்னவென்று எவருக்குமே தெரியாது. அதன்பின் தனேஸ்வரன் என்றொரு ஆசிரியர் உரும்பிராய் பக்கத்திலிருந்து பெரிய ஒரு BSA மோட்டார் சைக்கிளில் வருவார். அவரும் சிறிது காலம் எமது விளையாட்டு ஆசிரியராக கடமைபுரிந்தார் நான் பாலர் வகுப்பில் படிக்கும் போது ஓரிரண்டு ஆண்டுகள் RH ஜயர், குமாரசாமி என்று இரு அதிபர்கள் கடமையாற்றினர்கள். அதன்பின் கூடியகாலம் பருத்திதுறை வியாபாரிமூலையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை என்பவரே அதிபராக கடமையாற்றினார். அப்போதைய ஆசிரியர்கள் வேட்டியும் நாக்ஷனல் என்ற தேசிய உடையுமே அணிவது வழக்கம். கணபதிபிள்ளை அதிபரும் வெட்டிதான். அவர் எப்போதும் தனது வேட்டியை ஒருகையால் தூக்கிப் பிடித்துக் கொண்டுதான் திரிவது வழக்கம். அது இப்போதும் என் கண்முன்னால் உள்ளது .ஒன்பதாம் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எப்போதும் குழப்படிதான். அதிபர் முன்னால் விசாரணைக்கு வரும். அடியும் கிடைக்கும். உங்களை ஒன்றும் செய்ய முடியாது, உங்களுக்கு சிவப்பு மையால் சேட்டிக்கற் தருவதைத்தவிர வேறுவழி இல்லை என எச்சரிப்பார். அவரது கடைசி ஆயுதம் அதுதான், சிவப்பு மையால் சேட்டிக்கற் தந்தால் பின்னர் எந்தப்பாடசாலையிலும் சேரமுடியாது அது மரண தண்டனைக்கு ஒப்பானது என நாங்கள் பயந்து விடுவோம். அவர் அப்படி பல முறைகூறினாலும் எவருக்கும் கொடுத்ததாக ஞாபகம் இல்லை. அப்போது நாங்கள் பத்தாம் ஆண்டு, பாடம் நடத்தாத வேளையில் ஒரே சத்தம் அடிதடி மற்ற வகுப்புக்களை பாடம் நடத்தமுடியவில்லை என அதிபருக்கு முறைப்பாடு போனது. ஒவ்வொருவருக்கும் இவ்விரண்டு அடியுடன் சிவப்புமை சமாச்சாரம் வந்தது. அப்போது அங்குவந்த உப அதிபர் இளையதம்பி ஆசிரியர் அதிபரைப் பார்த்து, அவர்களில் என்ன பிழை ஆசிரியர் இல்லாத வேளையில் அவர்களுக்கு என்ன வேலை, அவர்களுக்கு பந்து ஒன்று இருந்தால் விளையாடப் போய்விடுவார்கள். ஏன் அடிபடப் போகிறார்கள். அவர்கள் தங்கள் திறமையை பந்தின்மீது காட்டுவார்கள் என்றார். எங்களுக்கு மிகுந்த சந்தோசம், உடனே எங்களுக்கு ஒரு பந்து வாங்கித் தரப்பட்டது.
விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல பேச்சுப்போட்டி நாடகங்கள் என பலவித நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெறுவதுண்டு, அயலூர் பாடசாலைகளை விட எம்மூர் பாடசாலைக்கு அப்போது நல்ல பெயரும் புகழும் இருந்தது. அதனால் அயலூர் கிரமங்களான வளலாய், வரணன் பத்தைமேனி, தொண்டமானாறு முதலிய கிராமங்களிலிருந்தும் பலர் வந்து எமது பாடசாலையில் கல்வி கற்றனர்,
எமது பாடசாலையின் ஆசிரியப்பணியில் அச்சுவேலி சிங்காரி ஆசிரியர் நெடுங்காலம் பணியாற்றியவர். அவர் எமது பெற்றோருக்கும் ஆசிரியப் பணியாற்றியவர், எமக்கும் கல்வி கற்பித்தவர். நாம் பாடசாலையை விட்டு விலகிய பின்பும் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது முதல் நியமனத்திலிருந்து இளைப்பாறும் வரை எமது பாடசாலையில் பணியாற்றிய பெருமை அவருக்கு உண்டு. அதனால் தனது மாணவர்களை மட்டுமல்ல அவர்களின் தாய் தந்தை குடும்பப் பின்னணி அனைத்துமே அவர் அறிந்து வைத்திருந்தார், தனது மாணாக்கர்களிடம் சினேக பூர்வமாகப் பழகுவதிலும் நகைச்சுவையுடன் பாடங்களை நடாத்துவதிலும் சிறந்து விளங்கினார்.
எமது பத்தாம் பதினோரம் ஆண்டுகளில் தமிழ் கற்பித்த திருமதி சிவனேசபிள்ளையும் சமய பாடம் கற்பித்த புவனேஸ்வரி ஆசிரியரும், எண்கணிதம் கற்பித்த இளையதம்பி ஆசிரியரும், வரலாறு கற்பித்த (முத்து) நடராசா ஆசிரியரும் எம்மை உயர்த்திய ஏணிகள்.
இவர்களில் சிலர் இப்போது மறைந்து விட்டாலும் எம்
மனதில் என்றுமே நிறைந்துள்ளனர்.
காலங்கள் சாவதுண்டு.
நினைவுகள் சாவதில்லை.
எமது ஆசிரியர்களுக்கும் என் பள்ளித் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் என் இனிய நினைவுகள் சமர்ப்பணம்.
எமது கோடைகால ஒன்றுகூடல் எதிர்வரும் 30.06.2012ம்திகதி சனிக்கிழமை அன்று நிகழ்த்துவதற்கான நேரம் ஒன்றுகூடியுள்ளது. சென்ற வருடம் நடந்த இடத்திலேயே இவ்வருடமும் நடைபெறும். வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்காக முன்கூட்டியே உங்களுக்கு அறியத்தரப்படுகிறது. மற்றும் இங்கு உள்ளவர்களுக்கும் உங்கள் வேலை இடங்களில் முன்கூட்டியே விடுமுறை எடுப்பதற்கு வசதியாக இரண்டு மாதத்திற்கு முன்கூட்டியே அறியத்தந்துள்ளோம். மேலும் இவ்வருடமும் வழமைபோல்
பெரியவர்கள் சிறியவர்கள் ஆண்கள் பெண்கள் என புதுப் புது விளையாட்டுக்கள் உள்ளன. உதாரணமாக முட்டி உடைத்தல் யானைக்குக் கண்வைத்தல் தேசிக்காய் கரண்டிஓட்டம் உங்கள் எல்லோராலும் விரும்பப்படும் கயிறுஇழுவை சங்கீதக்கதிரை ஓட்டப்போட்டி (இந்த விளையாட்டுக்கள் யாவையும் உங்கள் கடந்தகால பள்ளிப்பருவத்தை
முன்கொண்டுவந்து நிறுத்தும் எனநம்புகிறோம்.)இன்னும்பல விளையாட்டுக்களுடனும் உங்கள் கைவண்ண சிற்றுண்டிகளுடனும் மதிய இரவு உணவுடனும் இவ்வருட நிகழ்வு நடைபெறும். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம் சுவிஸ் இடைக்காடு வளலாய் ஒன்றுகூடற் கழகம். நன்றி.